தயாசிறி ஜயசேகர தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்!
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்தக் குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அதன் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். சபாநாயகர் விடுத்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
"2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் செயல் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு,
அது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மூவர் அடங்கிய குழுவொன்றை நான் நியமித்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
