திருகோணமலையில் மீண்டும் நிறுவப்பட்ட புத்தர் சிலை: பதற்ற நிலையால் பொலிஸார் குவிப்பு
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் தற்போது மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது.
அதன்படி, குறித்த பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் மீண்டும் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்று காலை இது தொடர்பில் அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிலையில் அங்கு பிக்குகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
பின்னர் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் பணித்தனர்.
ஆனால் அதனை பொருட்படுத்தாது நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவ்விடத்துக்கு வந்த பொலிசார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது, பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன் பதட்ட நிலமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் இன்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புத்தர் நிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
