கடல் சீற்றம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.
இதன்படி, அரபிக்கடலில் மீன்பிடிக்கும் மற்றும் கடல்சார் சமூகத்தினரை மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மிக பலத்த காற்று வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



