சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை!

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக வெளிநாட்டு நிதிக்காக காத்திருப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெப்பமண்டல நாடுகள் சுற்றாடல் தொடர்பான வர்த்தகத் திட்டங்களில் கவனம் செலுத்தி தமக்குத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற ‘WLI Asia Oceania Conference 2024’ நிறைவு விழாவில் கலந்தகொண்டு இதனைக் குறிப்பிட்டார்.
சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான முகாமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு ஜூன் 17 முதல் 21 வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெற்றது.



