மூதூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு: வழக்கு ஒத்திவைப்பு

மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குளம் மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச்செய்யப்பட்டனர்.
கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை (11) அன்று சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் 12 ஆம் திகதி ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதவான் தஸ்னீம் பௌசான், ஸ்தலத்துக்கு சனிக்கிழமை (15) விஜயம் செய்து பார்வையிட்டார். இந்நிலையில், குறித்த வழக்கு மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் வியாழக்கிழமை (20) விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரு தரப்பினரும் ஆஜராகியிருந்தனர்.
கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களின் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன்,நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அந்த வழக்கானது ஜூலை 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



