வெளிநாட்டு வேலை தருவதாக கூறும் மோசடியாளர்களை கைது செய்ய நடவடிக்கை!

#SriLanka #Foriegn
Mayoorikka
1 week ago
வெளிநாட்டு வேலை தருவதாக கூறும் மோசடியாளர்களை கைது செய்ய நடவடிக்கை!

அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.