விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #Agriculture
Mayoorikka
1 month ago
விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்த நடவடிக்கை!

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்தல், கண்காணிப்பதற்காக ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரசாங்க நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே புதியச் சபை நிறுவப்பட உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைத் திட்டம், அதனை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் காமினி சேனாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

 இந்த கொள்கை திட்டம் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், நிலைத்தன்மை மற்றும் ஈடுகொடுக்கும் தன்மையை மேம்படுத்துதல், உள்ளக வளர்ச்சி மற்றும் கிராமிய மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை பலப்படுத்தல், சந்தை பிரவேசம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நிறுவன மற்றும் நிர்வாகத் செயற்பாடுகளை பலப்படுத்தல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை வலுவூட்டுதல் உள்ளிட்ட விடயங்களை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார விவசாயத்திலிருந்து விடுபட்டு, பாரிய மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சிகளை உள்ளடக்கிய நவீன விவசாயத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய ஏற்றுமதித் துறையானது தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிப்பதாகவும், நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது விவசாயத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

 இக்கலந்துரையாடலில், நெல் மற்றும் ஏனைய விவசாய பயிர்கள், பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தின் பலதரப்பட்ட அம்சங்களையும் நவீனமயப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பயிர்ச்செய்கைக்காக 500,000 ஏக்கர் நிலத்தை விடுவித்தல் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.

 விவசாய மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த ஜனாதிபதி, அரச-தனியார் ஒத்துழைப்புக்களை பலப்படுத்த அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர மறுசீரமைப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. விவசாயப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேவையற்ற அரச நிறுவனங்களை இரத்துச் செய்தல் , தனியார் துறையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

 அத்துடன், விவசாயிகளின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குதல், விவசாய நவீனமயப்படுத்தலுக்கு அவசியமான நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற சவால்கள் குறித்தும் , நவீன விவசாய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினர்.

 இதற்காக முழுமையான திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். விவசாயத்தை நவீனமயப்படுத்தி, விவசாய தொழில்துறையை விரிவுபடுத்தி,நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.