இலங்கை இன்னும் ஆபத்தில் இருக்கிறது : ஹர்ஷ டி சில்வா!

இலங்கை இன்னும் பாரிய ஆபத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்தினால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கன்பரா தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்த அவர், இலங்கையை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



