கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது - சஜித் பிரேமதாச!

”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் இன்று (04.03) இடம்பெற்ற பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் டிஜிட்டல் மாற்றமிகு யுகத்தை உருவாக்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நாட்டிலுள்ள பாடசாலைகளில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.
நாட்டில் உள்ள சில பாடசாலைகளில் ஒரு கணனி கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும் ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் இடம்பெற்ற திருட்டுகளை மையமாக வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த போது அந்த திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றுணைந்தனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களை போன்றவர்கள்தான் என எண்ணுவது பிழையான நிலைப்பாடு ஆனால் ஊழல் வாதியை பாதுகாக்க 113 பேர் முன்நின்றது உண்மையே தனியார் கல்வியை வலுப்படுத்துவது எனது நோக்கமல்ல.
இலவசக் கல்வியை வலுப்படுத்தவேண்டும். நாட்டிலுள்ள கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.



