தமிழர் தாயகத்தில் சாந்தனின் புகழுடல்; பெருந்திரளான பொதுமக்கள் கண்ணீரோடு அஞ்சலி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் பூதவுடல் இன்றைய தினம் வடக்கில் உணர்வுபூர்வமாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்றுகாலை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தி பின்னர் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து,கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. கிளிநொச்சி வர்த்தக சங்கம், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைக்க, தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



