காசியானந்தன் கல்யாணம் எப்படி நடந்தது? மறவன்புலவு சச்சி ஐய்யா கூறுகிறார்

#Article
Mugunthan Mugunthan
2 months ago
காசியானந்தன் கல்யாணம் எப்படி நடந்தது? மறவன்புலவு சச்சி ஐய்யா கூறுகிறார்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்

 கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் திருகோணமலை தமிழரசுக் கட்சி திரு குகதாசன் இருவது திருமணங்களுக்கும் அழைப்பாளனாக நடத்திய மகிழ்ச்சியைப் பகிர்கிறேன். 

 கவிஞர் காசி ஆனந்தன் சிறையில் இருந்து விடுதலையானார். யாழ்ப்பாண மருத்துவமனையில் அவருடைய காதலி செவிலியர். மருத்துவமனைக்குப் பின் உள்ள வீட்டில் 1978இல் சில நாள்கள் தங்கி இருந்தார். 1960 - 63 காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் நானும் அவரும் ஒரு சாலை மாணாக்கர்.

 எனக்குத் திருமணம் ஆகி நான்கு குழந்தைகள். அவரோ தனிக்கட்டை. ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அகமும் புறமும் அறமும் புறமும் ஆகப்போகிறது என்றார். திருமணம் தள்ளிப் போவதற்கான காரணங்களை என்னிடம் சொன்னார். கொழும்பில் அவருடைய காதலியையும் அவரையும் என் மகிழுந்தில் ஏற்றித் திரிந்த நாள்களை நினைவூட்டினேன்.

 1969 -70 காலப்பகுதியில் அவர் கொழும்பில் அரசுப் பணியில். திருமணத்தை நான் நடத்தி வைக்கவா எனக் கேட்டேன். மகிழ்ச்சியுடன் உடன்பட்டார். தமிழ் இளைஞர் பேரவை திரு புஷ்பராஜா சுதந்திரன் ஆசிரியர் கோபம் மகேசன் அவர்களிடம் உதவி பெற்றேன். அருள்மிகு செல்வச் சன்னதி முருகன் கோயிலில் காலையில் தாலி கட்டல். மாலையில் வீரசிங்கம் மண்டபத்தில் வரவேற்பு. இரு நிகழ்வுகளுக்கும் நானும் மனைவியும் அழைப்பாளர்.

 முதலிரவு மறவன்புலவில். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் திரு குகதாசன் திருமணத்தையும் சென்னையில் அழைப்பாளனாய் நடத்தினேன். 

மணமகள் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஐயங்கார் பெண். இருவரும் காந்தளகத்தில் பணிபுரிந்த காலம். 1970களில் இலங்கை இந்து இளைஞர் பேரவையின் தலைமைச் செயலாளராக நான்.

 திருகோணமலை (குச்சவெளி?) இந்து இளைஞர் மன்றத் தலைவர் திரு குகதாசன். அவ்வாறு தான் அவர் எனக்கு அறிமுகம். அந்த நாள்தொட்டே அவரும் நானும் நல்ல நண்பர்கள். இந்து இளைஞர் இயக்கம் தொடர்பாக அப்போது நானும் திரு. குகதாசனும் பல நல்ல பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். 

 1990 தொடக்கத்தில் அவரும் அவர் காதலியும் சென்னை காந்தளகத்தில் பொறுப்பான பதவிகளில் எனக்கு உதவியாகப் பணிபுரிந்தார்கள். வடபழனி கோயிலில் திரு குகதாசனின் திருமணம். நண்பகல் உணவு எழும்பூர் உடுப்பி உணவு விடுதி. தங்கல் எழும்பூரில் என் வீட்டில்.