சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை பெற்றுள்ள சாந்தனின் உடல்நிலை மோசமாகி வருவதைக் கருத்தில் கொண்டு அவரை அவருடைய குடும்பத்தினருடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அவ் ஊடக அறிக்கையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் சிறப்பு முகாமிலே தடுத்துவைக்கப்பட்டு சிறைக் கைதிகளை போன்று தமது வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இலங்கைக்குச் சென்று குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதி கோரிய போதும் இன்றுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இத்தகைய நிலையில் சாந்தன் குடும்பத்தினரின் வேண்டுகோள்களுக்கு இணங்க இம்மாதம் 03 ஆம் திகதி இந்திய துணைத்தூதுவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தித்திருந்தபோது இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ வழியேற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டிருந்தோம்.
இத்தகைய நிலையில் சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமான சென்றிருப்பதானது, அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்பதியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையில் இருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீளத் திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவனம் செய்ய வேண்டும் எனவும், குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்சநீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம்.



