கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி : இனி தகவல்களை விரைவாக பெறலாம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று(29.01) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் வடிவமைக்கப்பட்ட குறித்த செயலி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப கிளையின் ஒழுங்குபடுத்தலில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனின் வழிகாட்டலில், மாவட்ட விதாதா உத்தியோகத்தர் த.முரளிதரனால் குறித்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்களங்களின் மாவட்ட இணைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் நிறைவில் குறித்த புதிய செயலி இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதனூடாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின் https://kilisec.info மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், திணைக்களங்களின் மாவட்ட இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



