சனத் நிஷாந்தவின் உயிரிழப்பு - மஹிந்தவிற்கும் கட்சிக்கும் பாரிய இழப்பு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கட்சிக்கும் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“சனத் நிஷாந்த புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்ட மக்களுக்காக உழைத்தவர். புத்தளம் மற்றும் சிலாபத்தில் இரண்டு நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்கு வரும் வழியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அரகலய போராட்டத்தின் போது புத்தளத்தில் உள்ள அவரது இல்லம் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது.
அதனால் புத்தளத்தில் ஓய்வெடுக்க ஒரு வீடு இல்லாததால் அவர் மீண்டும் கொழும்புக்கு வரும் போதே இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சனத் நிஷாந்த கலந்துகொண்டிருந்தார்.
வர் இரவு - பகல் பாராது மக்களுக்காக உழைத்த தலைவர். அதனால்தான் புத்தளத்தில் எப்போதும் முதலிடத்தை பிடிப்பார்.
அவரது இழப்பு உண்மையில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும்.” எனத் தெரிவித்துள்ளார். பொலிஸ் விசாரணைகளின் படி, இராஜாங்க அமைச்சரின் சாரதி மதுபோதையில் இருக்கவில்லை
எனவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சனத் நிஷாந்த கட்சிக்கும் மாவட்டத்திற்கும் பெரும் பலமாக திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சரின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.



