வியாபாரமாக்கப்பட்டுள்ள தமிழர் போராட்டமும் மூலப்பொருளாக்கப்பட்டுள்ள பிரபாகரன் (மேதகு) குடும்பமும்!

#SriLanka #Tamil People #Diaspora
Mayoorikka
4 months ago
வியாபாரமாக்கப்பட்டுள்ள தமிழர் போராட்டமும் மூலப்பொருளாக்கப்பட்டுள்ள பிரபாகரன் (மேதகு) குடும்பமும்!

தமிழர்கள் மீது, இலங்கை அரசினாலும் அரச படைகளாலும் முன்னெடுக்கப்பட்ட வன்மங்களால் தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் உந்தித் தள்ளப்பட்டார்கள்.

 முப்பதிற்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் தமிழர்களின் உரிமை மீட்பிற்காய் உருவாகி இருந்தாலும், அவற்றில் தக்கனப் பிழைத்தது விடுதலைப் புலிகள் இயக்கம் மாத்திரமே. புலிகள் இயக்கம் தமது கொள்கையை இறுகப்பற்றிக்கொண்டதாலும், தமது நிலைப்பாட்டில் ஒருமித்து பயணித்ததாலும் இலகுவில் தமிழர்கள் மனங்களில் நிறைந்துகொண்டனர்.

 கால மாற்றத்தில் விடுதலைப்புலிகள் முப்படைகளையும் தோற்றுவித்து, இலங்கை அரசிற்கு மாத்திரமல்ல சர்வதேச நாடுகளுக்கும், வல்லரசுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருந்தனர்.

 தமது இளமைக்கால கனவுகளையெல்லாம் திறந்து, ஏனையைவர்களைப் போல அவர்களும் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டிய நேரத்தில், விடுதலைதான் ஒரே வழி என்ற சிந்தனையில், தமது உயிர்களைக் ஆகுதியாக்கினார்கள்.

 புலிகளின் போராட்டத்தை அண்டை நாடான இந்தியா, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வலிந்திழுத்து, அவர்களின் பார்வையில் படும்படி விட்டனர் என்பதே நிதர்சனம்.

 இதன் விளைவாகவேதான் வல்லரசுகளுக்கும் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடத்தொடங்கியது. இதன் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை அரசோடு கைகோர்த்து தமிழர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.

 இவை இப்படியே இருக்க, தமது கொள்கையின்பால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொடை செய்து விடுதலை வேண்டி போராடிக்கொண்டிருந்த தமிழர் போராட்டம், முள்ளிவாய்க்கால் மண்ணில் முற்றுப்பெற்றது.

 இங்குதான் பெரும் பிரளயமே ஏற்பட்டு, இன்றும் உலக வல்லரசுகள்வரை மூக்கின் மேல் கைவைத்து சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்புப் பற்றிய கேள்வி, விடுதலைப்புலி உறுப்பினர்களையும் தமிழர்களையும் மட்டுமல்ல, சிங்கள தேசத்தையும் முழு உலக வல்லரசுகளையும் கிலிகொள்ள வைத்துள்ளது.

 தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளதாக ஒரு தரப்பும், போரிலே மடிந்துபோனதாக இன்னுமொரு தரப்பினரும் வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். இந்த நிலையில்தான், கடந்த 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்கள், தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

 எமது அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும், எந்த மூலையில் இருந்தாலும், தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும் எனவும், தங்களது தாராள உதவிகளை தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 அதுமட்டுமன்றி, ஈழ விடுலைப் போரை உலகெலாம் எடுத்துச் செல்லும் புலம்பெயர் தேசத்தில் வாழும் இளையவர்களுக்கு, நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

 புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள் ஈழ விடுதலைப் போரட்டத்திற்கு முன்னின்று உதவிகள் செய்ததை யாரும் மறுத்துவிட முடியாது. இருந்தும், தற்போது விடுதலைப் போராட்டம் மெளனித்ததன் பின்னர், குறித்த போராட்டத்தை வியாபாரமாக்கும் நோக்கோடு, ஒரு வகையைச் சார்ந்த புலம்பெயர் தமிழர்கள், வல்லரசுகளின் பிடிக்குள் சிக்குண்டு பணம் திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 போராட்டத்தை விற்று, புலம்பெயர் தேசத்தில் மிகத் தந்திரமாக பண வசூலிப்பை முன்னெடுத்தவர்கள், தற்போது தமது வியாபாரத்தின் மூலப்பொருளாக தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளனர்.

 பணம் என்ற மோகத்திற்குள் அகப்பட்டு விடுதலை வேண்டிப் போராடிய தமிழ் இனத் தலை மகனின் குடும்பத்தை, கேடயமாக பயன்படுத்தும் அநாகரிகத்தை, தமிழ் இனத்தின் ஒரு வகையைச் சார்ந்தவர்களே அரங்கேற்றுவது, "சொந்தக் காசில் சூனியம் வைப்பதைப் போலாகிறது". 

 தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா வெளிப்படுவதைப்போல, போலி ஒன்றை உருவாக்கி பணம் பறிக்கும் செயற்பாட்டை கடந்த சில நாட்களாக அரங்கேற்றிவருகின்றனர். 

 இதனால் அவர்கள் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை என்கின்ற போதுதான், இங்கே பெருத்த சந்தேகம் எழுகிறது. யாருடைய காய் நகர்த்தல்களில் இந்த விடயங்கள் நகர்கிறது என நோக்கினால், விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்த்தவர்களும், அவர்களைத் தடை செய்த சர்வதேச நாடுகளையும், திருப்திப் படுத்தவே இவ்வாறான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 

 மீண்டும் நாட்டில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கி, சொல்லப்போனால் "குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பதற்கு" ஒப்பான செயல்பாட்டை கனகச்சிதமாக முடுக்கிவிட்டுள்ளனர். நாட்டில் குழப்பம் உள்ளதாகக் காட்டி, தொடர்ந்தும் புலம்பெயர் தேசத்தில் தமது இருப்பைத் தக்கவைக்கவே முனைகின்றனர். 

 தமிழர்களின் இருப்பு, அல்லது அவர்களின் எதிர்காலம் போன்றவற்றை சிந்திக்க வல்லமை இல்லாத ஒரு கூட்டத்தினரே, இவ்வாறான புனை கதைகளை உருவாக்கியுள்ளனர். 

 எவ்விதமான கொள்கையோ கோட்பாடோ இல்லாத நிலையில் வல்லரசுகளின் கைப்பிள்ளைகளாக செயல்பட்டு, ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை இழிவாக்கம் செய்துவருவதையே காட்டி நிற்கிறது. 

 தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசம் கொஞ்சம் கொஞ்சமாக செவிமடுத்து வரும் நிலையில், "கொடியேறும் நேரத்தில் கம்பத்தை சரிப்பதற்கு" ஒப்பான நிலையை உருவாக்கியுள்ளது. எவ்விதமான தீர்வுகளும் தமிழர்களுக்கு கிடைத்துவிடக்கூடாதென்பதை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு அவற்றை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 புலம்பெயர் தேசத்திலுள்ள ஒருவகையைச் சார்ந்த, நிறை போதையில் உள்ளவர்கள் போலித் தேசியத்தை கட்டவிழ்த்து மக்களை நிலைதடுமாற வைத்து, மீண்டும் ஒருமுறை அழிவை நோக்கிப் பயணம் செய்ய எத்தனிக்கிறார்கள். 

 இந்த விடயங்களில் எவ்வித உண்மையும் இல்லாத போதும், அவற்றை மிக நேர்த்தியாக திட்டமிட்டு விடுதலைப் போராட்டத்தையும், தலைவர் பிரபாகரன் அவர்களின் குடும்பத்தையும் முடிந்தளவிற்கு அவமானம் செய்கின்ற செயலுக்கு, உலகத்தமிழர்கள் உடந்தையாக இருந்துவிடக்கூடாது என்பதே இங்குள்ள தீர்வாகும். 

 இவ்வாறான புரளிகளுக்கு காலம் ஒருநாள் தகுந்த பதிலைக்கொடுக்கும்வரை, தமிழர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.

 நான் உங்கள், 

 ஈழத்து எழுத்தாளர் 

 வவுனியூர் ரஜீவன் -