வடக்கு மக்களிற்கு ஆதரவு: உலக வங்கியின் பிரதிநிதிகள் உறுதியளிப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்குக்கு வருகைதந்திருக்கும் உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திங்கட்கிழமை (30) சந்தித்திருந்தார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு ஆளுநர் தெரியப்படுத்தியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இவற்றைக் கேட்டறிந்த உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் கவனத்தில் கொள்வதாகவும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு தாம் கைகொடுப்பதாகவும் கூறியிருந்தார்.
வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் எனவும் உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்காலத்தில் வடமாகாண மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.