இலங்கையில் குரங்குகளுக்கும் கருத்தடை சாதனம் அறிமுகம்!
பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்து குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக 'லூப் கருத்தடை' எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.
பெண் குரங்குகளுக்குள் IUD ஐச் செருகுவதற்கான சாத்தியமான வழியைக் கண்டறிய ஒரு சோதனை நடந்து வருவதாகவும் கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “IUD எனபது T- வடிவ பிளாஸ்டிக் துண்டாகும். அதை கர்ப்பத்தைத் தடுக்க கருப்பையில் வைக்கப்படவேண்டும்.

குரங்குகளின் கருப்பையின் அளவு மற்றும் கருப்பை வாயில் IUD களைச் செருகுவதற்கான பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
தற்போது பெண்களுக்குப் பயன்படுத்தப்படும் லூப், குரங்குகளுக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ளது.
எனவே, குரங்குகளுக்குள் IUDயைச் செருகுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய கால்நடைத் துறை மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த இரண்டு வைத்தியர்களைக் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் வெற்றியடைந்தால், இனி அறுவை சிகிச்சைகள் இருக்காது. ஆனால், முதல் கட்டமாக எமக்கு இருக்கும் பாரிய வேலைத்திட்டம் என்னவென்றால், தெரிவு செய்யப்பட்ட குரங்குகளுக்கு மயக்க மருந்து கொடுப்பது மட்டுமே. IUDயை நிறுவிய பின், விந்தணுக்கள் கருப்பையை அடைவதைத் தடுக்கிறது மற்றும் குரங்குகள் கருத்தரிப்பதைத் தடுக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு குரங்குக்கு ஏற்ற IUDகளை தயாரிப்பதற்காக குறைந்த பட்சம் 1000ரூபாய் செலவிடப்படும். இதுதொடர்பில் IUD தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் குரங்குகளைப் பிடித்து சில இடங்களில் விடுவார்கள். IUDகள் பரவலாகக் கிடைத்தால், மக்கள் தாங்களாகவே குரங்குகளுக்குள் அவற்றைச் செலுத்தி குரங்கின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவலாம்," என்று அவர் மேலும் கூறினார்.