தெற்கு காசா பகுதிக்கு தண்ணீர் விநியோகத்தை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை!

தெற்கு காசா பகுதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வடக்கு காசா பகுதியில் இராணுவ நிலைமை காரணமாக பல பொதுமக்கள் தெற்கு காசா பகுதியில் தங்கியிருப்பதை கவனத்தில் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தெற்கு காஸா பகுதிக்கான நீர் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக காசா பகுதியை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், தற்போது காசா பகுதியின் வடக்கு பகுதியில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, காசா பகுதியில் இடம்பெற்ற மோதலின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் 155 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக வைத்திருப்பதை இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.



