பொது இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரக அதிகாரி

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவர் பொது மக்கள் முன்னிலையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாக்குதலை மேற்கொண்டவர் மத்திய கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளன. தாக்குதலின் அதிர்ச்சியூட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
நடைபாதையில் விழுந்து கிடக்கும் அதிகாரி தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சிப்பதை காணொளி காட்டுகின்றது. அதே நேரத்தில் வெள்ளைச் சட்டை மற்றும் சன்கிளாஸ் அணிந்த ஒரு நபர் மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரை கத்தியால் மீண்டும் மீண்டும் குத்துகிறார்.
தூதரக அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தூதரக வளாகத்தில் இந்த தாக்குதல் நடைபெறவில்லை எனவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சீனா தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகு பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் வழக்கம் போல் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



