இஸ்ரேலில் ஏற்பட்ட மோதலில் இலங்கையர் ஒருவர் காயம்

காஸா பகுதியில் இயங்கி வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலில் உள்ள ரமல்லாவில் உள்ள இலங்கைத் தூதரகம் நாட்டின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் தீவிரமடைந்து வருவதால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அத்துடன், வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுப்பதோடு, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்கு அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களினால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



