2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடல் அவசியம்

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் “ஓரே தீர்மானம் – ஒரே பாதை” என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் காரணமாக இலங்கை போன்ற நாடுகள் மீது ஏனைய நாடுகள் சந்தேக கண்ணோட்டத்தை செலுத்தியுள்ளதாகவும், இதனால் தெற்குலக பொருளாதார செயற்பாடுகளுக்கு தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க பழகியுள்ளதாகவும் அது புதியதொரு விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் பேர்லின் நகரில் இன்று (28) நடைபெற்ற “பேர்லின் குளோபல்” மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார் அதிக பணவீக்கம், எண்ணெய் விலை ஒரு கொள்களனுக்கான விலை 100 அமெரிக்க டொலர்களாக உயர்வடைதல், உலக வங்கியின் நிதி மட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம்.
இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியில் இவ்வருடம் வரையில் எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் இருப்பதை உதாரணமாக கூற முடியும். அதனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதை அறிய முடிவதோடு, அதிகரித்துவரும் ஏற்றுமதிச் செலவு, உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மை மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இலங்கை போன்ற நாடுகளை வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாற்றி விடுகின்றன.
வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் அனைத்து வகையான தற்காப்பு வழிமுறைகளையும் நிதி கையிருப்புக்களையும் பேணி வருகின்றன. எம்மை போன்ற நாடுகளுக்கு அவ்வாறான கையிருப்புக்கள் இல்லை. அதன் விளைவாகவே இறையாண்மைக் கடன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
விரைவில் பொருளாதாரத்தை சீரமைக்கத் தவறினால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் கடன் சுமையில் உள்ளன. இவ்வாறான புதிய முறைமைக்கு முகம்கொடுக்கும் பொறிமுறை சர்வதேச நாணய நிதியத்திடமும் இல்லை. இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த நேரத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த அனைத்து நிதிச் சலுகைகளும் தடைப்பட்டன.
அதனால் நாட்டுக்குள் அரசியல் நெருக்கடியும் தோன்றியது. இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கியின் உதவியும் இலங்கையின் பழைய நண்பரான சமந்தா பவரின் உர மானிய உதவியும் கிடைத்திருக்காவிட்டால் நான் இந்த பதவியுடன் இங்கு வந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
அதனால் வங்குரோத்து நிலையை அறிவிக்கும் நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான எந்த முறைமையும் இல்லை. இருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் பசுமை காலநிலை நிதியத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஜேர்மனியின் செயற்பாடு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.



