அவிசாவளை பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20.09) இரவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்வம் குறித்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு டி56 துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



