இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தவேண்டும் என்பதே நிபந்தனை!

#SriLanka #Sri Lanka President #IMF #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தவேண்டும் என்பதே நிபந்தனை!

இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தவேண்டும் என்பதே தமது நிபந்தனையாக இருக்கின்றது என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அந்நிபந்தனை செயற்படுத்தப்படும் முறை குறித்து தாம் ஆராயவில்லை எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் , தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை தொடர்பில் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.

 அந்தவகையில் கடந்த வாரம் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

 அதன்படி உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையின்கீழ் சாதாரண தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் இலக்குவைக்கப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதன்விளைவாக தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ள எதிர்ப்பு என்பன பற்றி விளக்கமளித்தார்.

 அவற்றை செவிமடுத்த அதிகாரிகள் கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்பதே தமது நிபந்தனையாக இருக்கின்றது எனவும், அந்நிபந்தனை செயற்படுத்தப்படும் முறை குறித்து தாம் ஆராயவில்லை எனவும் பொருள்படும் வகையில் கருத்து வெளியிட்டனர்.

 அதேவேளை தேர்தல்கள் தொடர்ந்து பிற்போடப்படுகின்றமை தொடர்பில் அவர்களிடம் சுமந்திரன் எடுத்துக்கூறியபோது, அதுபற்றிய கரிசனை தமக்கும் இருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். 

அதுமாத்திரமன்றி சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாகவே உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் காண்பிக்க முற்பட்ட வேளையில், நாணய நிதிய நிபந்தனைகளுக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கும் தொடர்பில்லை என தாம் வழங்கிய தெளிவுபடுத்தல் குறித்தும் சுட்டிக்காட்டினர்.

 மேலும் இவ்வாறான நடவடிக்கைகளால் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் முழுமையாகத் தோல்வியடையக்கூடிய நிலையேற்படுமாயின், அதுகுறித்து அரசாங்கத்துடன் அவசியமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 இதுஇவ்வாறிருக்க சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது. 

அக்கடனுதவியின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக்கும் முதலாம் கட்ட மதிப்பீடு நேற்று முன்தினம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!