சனல் 4 வெளியிட்ட சர்ச்சை காணொளி! விழி பிதுங்கி நிற்கும் பிள்ளையான் தரப்பினர்! தப்பியோடவும் முயற்சி

அண்மையில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளிகள் இலங்கையில் உள்ளவர்கள் பலரை பெரும் பீதியடையச் செய்துள்ளது.
அதில் ஒன்று ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி. அதே போன்று மற்றையது சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச்சம்பவம்.
இந்த காணொளி மூலமாக பலர் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக பிள்ளையான் தரப்பினர் விழி பிதுங்கி கலங்கி நிற்கின்றனர்.
இதற்கு காரணம் இந்த காணொளியில் முக்கியமான சாட்சியங்களாக இருப்பவர்கள் இரண்டு பேர்.
அதில் ஒருவர் பிள்ளையானின் அதாவது சிவநேச துரை சந்திரகாந்தனின் பேச்சாளராக இருந்தவர் தற்பொழுது நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானா. மற்றையவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான நிசாந்த டி சில்வா.
இவர்கள் தான் தற்பொழுது ஈஸ்ட்டர் தாக்குதல் மற்றும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சனல் 4 ஊடகத்தில் கொலை தொடர்பான பின்னணியை விளக்கி இருந்தனர்.
லசந்தவின் படுகொலை கொழும்பில் உள்ள திரிபோலி என்னும் கொலைக் கள முகாமில் இருந்துதான் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த முகாம் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது என்பதையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தார் காணொளியின் மற்றைய சாட்சியான குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான நிசாந்த டி சில்வா.
அத்தோடு அவர் அந்த முகாமிலுள்ள ஐந்து பேர் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் திட்டம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
2015 இல் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான சூழலில் ராஜபக்சவினரும் பிள்ளையான் தரப்பினரும் ராஜபக்ஸவினருக்கு விசுவாசமாக செயற்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவினரும் நெருக்கடிக்குள்ளாகினர்.
அந்தக் கட்டத்தில் தான் கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் சதித் திட்டம் உருவானதாக தெரிவித்திருந்தார் அசாத் மௌலானா.
இந்த சதித் திட்டத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த தற்பொழுது அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயையும் சஹ்ரான் தலைமையிலான தற்கொலைக் குண்டுதாரிகளையும், ஒன்றிணைக்கும் வேலையை முன்னெடுத்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சஹ்ரான் தரப்பினருடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தித்துப் பேசியது தொடக்கம், குண்டுதாரி ஒருவர் தப்பிச் செல்வதற்கு உதவியது வரை தனது பங்கையும் ஏனையோரையும் அசாத் மௌலானா அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தான் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள ராஜபக்ச தரப்பினரும் பிள்ளையான் தரப்பினரும் இந்த குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளனர்.
இருந்தாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதினால் பல சிக்கல் நிலை உருவாகியுள்ளது. பல்வேறு தரப்பினர்களினாலும் இதற்கு நீதியான விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும் என்றெல்லாம் குரல்கொடுத்து வரப்படுகின்றது.
இந்த நிலையில் தான் தற்பொழுது பிள்ளையான் தரப்பினருக்கு பெரும் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்க முன்னேரே அவர்கள் திணறி வருகின்றனர்.
தற்பொழுது ராஜபக்சர்கள் ஆட்சியில் இல்லாததன் காரணமாக யாரிடம் உதவி கோருவது என்பதில் திண்டாடி வருகின்றனர்.
சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியின் தாக்கங்கள் மற்றும் விசாரணைகள் எவ்வாறு அமைய இருக்கினறன என்பதும், அல்லது வழமையாக தமிழர்களுக்கான நீதி தொடர்பான விசாரணைகளாக தொடர்ந்து இழுத்தடிப்பு செய்யப்படுமா? அல்லது இதற்கு நீதி கிடைக்குமா? குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



