காலியில் ரஷ்யப் பிரஜைகளுக்கிடையில் மோதல்: 38 லட்சம் ருபாய் கொள்ளை

காலி, ஹபராதுவ, தல்பேயில் உள்ள நிறுவனமொன்றில் ரஷ்ய பிரஜை ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் 4 ரஷ்ய பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த முப்பத்தொன்பது வயதான ரஷ்ய பிரஜை காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய நான்கு ரஷ்ய பிரஜைகள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய பிரஜை ஆகியோர் ரஷ்ய ரூபிள்களை இலங்கை நாணயத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணப்பரிவர்த்தனையின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களை தாக்கிய நான்கு ரஷ்யர்கள் அவர்களிடமிருந்த 38 இலட்சம் ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



