வடகொரியாவின் ஏவுகணை ஒத்திகை பயிற்சி தென்கொரியாவுக்கு அதிர்ச்சி

வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்தது.
இருப்பினும், தென் கொரியா தனது பயிற்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தென் கொரியாவிற்குள் இருக்கும் ராணுவ தளங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் வடகொரியா பயிற்சிகளை மேற்கொண்டது. அதன்படி 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.
ஐ.நா. உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.



