நிதி முறைகேடு: முல்லைத்தீவு கல்வி வலய கல்விப் பணிப்பாளரை விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு கல்வி வலயத்தின் விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த முன்னணி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் தகவல் அறியும் சட்ட மூலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போலியான பதில்களை வழங்கினார் என்று மேன்முறையீடு செய்யப்பட்ட முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளரை விசாரணைக்கு வருமாறு தகவல் அறியும் சட்ட ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஒக்டோபர் 5ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தகவல் அறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக சமூகமளிக்க ஏதேனும் காரணங்கள் இருப்பின் முன்கூட்டியே தெரிவித்து இணையவழியில் பதில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் ஆணைக்குழுவினால் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா தொடர்பான நிதி சேகரிப்பு உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என சில காரணங்களை குறிப்பிட்டு முல்லைத்தீவு வலையக் கல்வி பணிப்பாளருக்கு தகவல் அறியும் சட்ட மூலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விசாரணைக்கு சமூக மளிக்குமாறு வலய கல்வி பணிப்பாளருக்கு ஆணைக் குழுவினால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது மணிவிழா குழு தலைவர் த.அருட்க்குமரன் தலைமையில் மணிவிழா இடம்பெறுவதாக அழைப்பிதழிலும், பத்திரிகை விளம்பரத்திலும், பத்திரிகை செய்திகளிலும் குறிப்பிடப்பட்ட நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளர் மணிவிழாக் குழு கூடவில்லை என முறைப்பாட்டாளருக்கு தகவல் அறியும் சட்டமூலத்துக்கு பதில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் முறைப்பாட்டாளரால் தமக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் போலியான தகவல்களை வழங்கினார் என தகவல் அறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு மேல்முறையீடு செய்த நிலையில் விசாரணைக்கு சமுகமளிக்குமாறு வலய கல்வி பணிப்பாளருக்கு ஆணைக்குழுவினால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் பாடசாலையில் முரணாக இயங்கும் ஆசிரியர் நலன்புரிச் சங்க யாப்பினை கோரிய நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளர் முறைப்பாட்டாளருக்கு பதில் எதுவும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.



