சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை - வெளிவிவகார அமைச்சு!
சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் சிக்ஸ்’ இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை மேலும் ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கைக்கான சீனத் தூதரகமும் கப்பலை வரவழைத்து வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது. சீன ஆய்வுக் கப்பலான 'ஷி யான் சிக்ஸ்' அக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் என சமீபத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதி உட்பட விரிவான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தி சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகை குறித்து இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கவலை தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.