மன்னார் அடம்பன் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை:சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் தேடுதல்

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் வகையில் மன்னார் மூர்வீதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் இடம் பெற்றுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதி உள்ளடங்களாக அப்பகுதியில் உள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா ( 43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து ( 56) என தெரிய வந்துள்ளது.
மன்னார் - நொச்சிக்குளம் பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற இரட்டை கொலையில் இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த இருவரின் மேலும் இரு சகோதரர்கள் அடியாட்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியும் வெட்டியும் வருகின்றனர். அண்மையில் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாகனத்தினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நொச்சிக்குளத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களின் சகோதரர் ஒருவரை தேடி வருகின்றனர்.
குறித்த இரு சந்தேக நபர்களும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். .
இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பல்வேறு பகுதிகளில் தேடுதலை முன்னெடுத்து வருகின்றனர்.



