நல்லுார் உற்சவத்திற்காக அமைக்கப்பட்ட கச்சான் விற்பனைக்கூடங்களிற்கு தியாகி அறக்கட்டளை நிதியுதவி

நாட்டில் நிலவும் பொருளாதார சுமை காரணமாக மக்கள் சொல்லெணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
கடன்சுமைகள் காரணமாக பலர் விபரீத முடிவுகளை எடுத்து தம் வாழ்வை அழிப்பதாக செய்திகளூடாக அறிகிறோம். இந்நிலையில் வடக்கின் யாழ்பாணத்தில் பெருவிழாவாக சரித்திர பெருமைவாய்ந்த நல்லூர் கந்தன் உற்சவகாலத்தை இலக்குவைத்து விற்பனைக்கூடங்களை ஏலம்விடும் நடைமுறையை ஒழுங்குபடுத்துபவர்களால் அப்பாவி மக்கள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகிறது.
நகைகளை சொத்துப்பத்துக்களை அடகுவைத்தும் , வட்டிக்கு பணம்பெற்றும் பல லட்சக்கணக்கில் வியாபாரக் கூடங்களை ஏலத்தில் பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
குறிப்பாக சில வியாபாரிகள் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பணத்தைக்கொடுத்து கச்சான் விற்பதற்கான கூடாரங்களை அமைப்பதற்கான இடங்களை ஏலத்தில் பெற்றதாக தெரிகிறது.
பணத்தை பெற்றதோடு நின்றுவிட்ட நிர்வாகத் தரப்பு குறித்த மக்களின் அடிப்படை வசதிகளையோ கூடாரங்களை அமைப்பதற்கோ உதவவில்லை என்று மக்கள் விசனப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான முறையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத ஏல நடைமுறைகளில் இருந்து விலகி நின்று நியாயமான குறைந்த கட்டணத்தில் இடங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு உதவுவதாக தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும், மக்களின் விபரீத மனப்பாங்கால் இம்முறையும் ஏல நடைமுறைகளால் பரிதாபமாக ஏமாற்றப்பட்ட மக்களை எண்ணி கவலையுற்ற தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று நிலைமைகளை கேட்டறிந்து தெரிவுசெய்யப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கடைகளுக்கு ( குறைந்த விலையில் ஏலத்தில் விற்பனைக்கூடங்களுக்கான இடத்தை பெற்றவர்களுக்கு) இரண்டு மில்லியனுக்கு அதிகமான நிதியை முதல்கட்டமாக தனது நிதிய வளாகத்தில் வைத்து அவரவர் கொள்வனவு விலைக்கேற்ப பகிர்ந்து வழங்கியுள்ளார்.
இரண்டாவது கட்டமாக நாளைய தினமும் ( செவ்வாய்க்கிழமை ) குறைந்த விலையில் ஏலத்தில் பெற்ற பற்றுச்சீட்டுக்களுடன் வருபவர்களுக்கு ஆறுதல் தொகையாக கணிசமான அளவு நிதியை வழங்கவுள்ளார்.



