சிறை அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை தூண்டிய நபர் தொடர்பாக வெளியான தகவல்

சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் உட்பட பல அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.
இது அதிகாரிகளின் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவது தொடர்பானது. 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த காலங்களில் பல அதிகாரிகள் அரச சேவையை விட்டு வெளியேறியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரி சிறைக்காவலர்கள் உட்பட பல தரப்பட்ட அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்தனர்.
கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் ஏறக்குறைய அனைத்து சிறைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
விடுமுறையில் சென்று நியூசிலாந்தில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரியொருவரே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகளில் வேலைநிறுத்தம் செய்வதற்கான எதிர்ப்புப் பதாகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இதனை அறிந்த சிறைக்காவலர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு தடுக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.



