அறுகம்பே சுற்றுலா வலயம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #Tourist #Ampara #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
அறுகம்பே சுற்றுலா வலயம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் அறுகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அறுகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

 அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

 2035 ஆம் ஆண்டளவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 வீதம் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டப்படும் என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையின் வருமானத்தின் ஊடாக இலங்கையின் நிதிப் பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வு பெற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், அடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

 சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கான இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார். 

 அந்த சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார். அதன்பின், அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்துரையாடி, சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். 

 அறுகம்பே கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்கையில் அங்குள்ள மீன்பிடித் துறைமுகத்தை, தேவையான வசதிகளுடன் வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி வீரசிங்க ஜனாதிபதியிடம் முன்வைத்தார். அது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

 அத்துடன் அங்கு சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வியாபார ஸ்தலங்களுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

 இது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இதற்குத் தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வர்த்தக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. 

 அருகம்பே பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண உத்தேச கெடஓயா குடிநீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய இன்னும் சில வருடங்கள் செல்லும் என்பதால், கடற்படையின் உதவியுடன் தற்போதுள்ள சிறிய நீர் மூலங்களுக்கு மீள்சுழற்சி செய்யும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுவது குறித்து ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

 அத்துடன் அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடித் துறையை நவீனமயமாக்கலைப் போன்றே, விவசாய நவீனமயமாக்கலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார். 

 இந்த சந்திப்புக்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!