வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இன்று (26.08) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீரிழப்பைத் தடுக்க, தண்ணீர் உள்ளிட்ட இயற்கையான திரவங்களைக் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நேற்றைய தினம் (25) அதிகபட்ச வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன், அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்கள் போன்ற அதிக வெப்பத்தை உணரும் ஏனைய பிரதேசங்களில் 30.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 29 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது.
சுற்றுச்சூழலின் வெப்பநிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், உடலால் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தினால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல சிறிய குளங்கள் வறண்டுள்ளன. கடும் வறட்சியான காலநிலை காரணமாக இரத்தினபுரி, ரங்வல ஒலு ஏரி முற்றாக வறண்டுள்ளதுடன், ரங்வல, உட ரங்வல, கொடகவெல, ஓபநாயக்க, பிபிலேகம ஆகிய கிராமங்களில் தேயிலை, பப்பாளி, மரக்கறி பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநுராதபுரம் புளியங்குளம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பூசணிக்காய்கள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



