பணிப்புறக்கணிப்பு: நோயாளர் பராமரிப்பு சேவைகள் பெரிதும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று (24) காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை சித்த வைத்திய சேவைகள் கூட்டுப் படை ஆரம்பித்துள்ளது.
நாளை காலை 08 மணி வரை தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அனைத்து அரச வைத்தியசாலைகளின் நோயாளர் பராமரிப்பு சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக மாகாண வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நடவடிக்கைகள் செயலிழந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், மகப்பேறு, குழந்தைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
துணை மருத்துவ பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு நியாயமானது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பின் போது தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடுவதற்காக வைத்திய நிபுணர்களின் கூட்டுக் குழு இன்று காலை சுகாதார அமைச்சுக்கு விஜயம் செய்தது.
இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 10,000 கையொப்பங்களை சேகரிக்கும் சமகி ஜன பலவேகவின் பொது மனுவில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று மாளிகாவத்தையில் இடம்பெற்றது.
அத்துடன், சுகாதார அமைச்சருக்கும் அமைச்சின் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
அதில், நாட்டின் மருந்துத் தேவையை வினைத்திறனுடன் பூர்த்தி செய்வதற்கும், மருந்துப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதாரத் துறையின் நிதிப் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொகையை விட 65 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



