காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேசிய ஆலோசனை குழுவொன்று நியமனம்!
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இலங்கையின் மூலோபாய திட்டத்தை வழிநடத்த தேசிய ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மூலோபாய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய ஆலோசனைக் குழுவொன்றை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இலங்கையின் முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் வகையில் இன்று (23.08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் குழு 06 மாதங்களுக்கு ஒரு தடவையாவது கூடி அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
பல நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலில், வரவிருக்கும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நாடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மூலோபாய திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்க வலுவான வேலைத்திட்டம் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, உலகளாவிய ரீதியில் சவாலை வெற்றிகொள்வதில் வலுவான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து செயற்பாடுகளிலும் நிதித்துறை முக்கிய காரணியாக இருப்பதுடன், காலநிலை சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
அத்துடன், காலநிலை சவால்களை வெற்றிகொள்வதில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் சர்வதேச ஆய்வு மையமாக பேணப்பட வேண்டுமெனவும், அது காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.