விடுதலைப்புலிகள் காவி உடையை மதித்தார்கள் : பௌத்த தேரர்!
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை. மாறாக பாதுகாப்பே இருந்தது என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று இன்று(21.08) வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊடக சந்திப்பில் நான்கு மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது குருந்தூர் மலைப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பது முரணானது. ஆனால் இங்கு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை. தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனக்கூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா?
அவ்வாறிருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தேரர், விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது. அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிங்கள பெளத்தம் என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு அனைவரும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அரசியலுக்காக கதைக்கும் பைத்தியக்காரர்கள் பற்றி கவலை வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.