யாழில் வறட்சியால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19,704 பேருக்கு குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.