இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்!
கடந்த 24ஆம் திகதி அதிகாலை பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நீதவான் வசீம் அஹமட் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 05 பேர் கடந்த 31ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வவுனியா பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முற்பட்டிருந்தனர்.
இதன்படி உரிய விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நேற்று (02) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் தொற்று நோய்கள் பரவி வருவதனால் சந்தேகநபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.