மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் ஆவண நூல் வெளியீடு
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு ஜனனதின நிகழ்வும் ஆவண நூல் வெளியீடும் "தலைவர் சிவா 100" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டியில் இடம்பெற்றது.
கரவெட்டி சம்பந்தர் கடையடி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வியாழக்கிழமை(20) மாலை 3 மணியளவில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிவசிதம்பரம் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. "தலைவர் சிவா 100" என்கிற நூற்றாண்டு நினைவு ஆவண மலர் வெளியிடப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு கௌரவமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கு.மிகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன், பேராசிரியர் சி.சிவலிங்கராசா, தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், முன்னாள் எம்.பி. மு.சிவசிதம்பரம் அவர்களின் மகள் நிராஞ்சலி தேவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் வி. மணிவண்ணன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முருகேசு சிவசிதம்பரம் (ஜுலை 20, 1923 - ஜுன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியலில் நீண்டகாலம் செயற்பட்டதுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு வழக்கறிராவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்திலும் நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியிலும் இன்று காலை நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.


