ஈரானை அச்சுறுத்த F-16 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா

பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதனால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியமான பாதையாக கருதப்படுகிறது. இப்பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சி செய்து வருகிறது.
ஆனால் இதனை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஈரான், எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதையோ சேதம் விளைவிப்பதையோ தடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.
கடந்த வாரம் இந்த ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்ற முயன்றது. ஒரு கப்பலின் மீது துப்பாக்கி சூடும் நடத்தியது. தற்போது வளைகுடா பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏ-10 (A-10) ரக தாக்குதல் விமானங்கள் ரோந்து வருகின்றன.
இவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளது. எஃப்-16 விமானங்கள் ஈரானின் முயற்சிகளுக்கு தடையாக, நீர்வழி பாதையில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
மேலும், அப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் பலமிக்க தோற்றத்தை உருவாக்கும் என அமெரிக்கா நம்புகிறது. சிரியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷியா, ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
இது ரஷியா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய 3 நாடுகளிற்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமாகிறது. மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், ரஷியா மற்றும் சிரியா கைகோர்ப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.



