ராகம வைத்தியசாலையில் தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு தாய் மரணம்
திடீர் வயிற்றுவலி காரணமாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல வடக்கு படகம, அவேரியா வட்ட வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த ப ஹன்சிகா சஜனி பெரேரா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை அதிகாரி எஸ். பி. டி. என். சேனாநந்தா முன்னிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் சாட்சியமளித்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளருமான சங்கபால ஆராச்சிகே அமிலபத்து திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
என் மனைவி இறந்துவிட்டாள். கடந்த 26ஆம் திகதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் ராகம போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன்.
பரிசோதனைக்குப் பிறகுஇ மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதன்பின், பித்தப்பையில் சிறிய கல் இருந்ததால், மருத்துவமனையின் 37வது வார்டில் அனுமதிக்கப்பட்டார். 28ம் திகதி மதியம் அவள் நலமாக இருப்பதாகவும், வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவமனையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
ஆனால் அன்று மாலையே அவளது உடலில் கிருமி இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சையாக ஊசி போடப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 29ஆம் திகதி மதியம் 2.30 மணியளவில் அவள் இறந்துவிட்டதாக அறிந்தேன் என குறிப்பிட்டார்.
குறித்த பெண்ணின் உடலில் நுழைந்த கிருமிக்கு சிகிச்சையாக வழங்கப்பட்ட தடுப்பூசியினால் குறித்த பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவிதான அவர்களின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்றன.