இலங்கைக்கு நிதி உதவி வழங்க முன்வந்துள்ள சீனாவின் முக்கிய வங்கி!
இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்காக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி முன்வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி,கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரி, சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வு பலினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதன்போது இலங்கையின் பேச்சுவார்த்தையாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாகவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் சீன வங்கி உறுதியளித்ததாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியது.
இதனையடுத்து தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க அரசாங்கம் தனது கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளன.
இந்தநிலையில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 சதவீதம் சீனாவில் இருந்து பெறப்பட்ட கடன்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.