பாவனையில் இருந்து நீக்கப்பட்ட மருந்து வகை!
சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் குறித்த மருந்துத் தொகுதியை விநியோகித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் S.D.ஜயரத்ன தெரிவித்தார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசேரியன், ஹேர்னியா சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அண்மையில் பதிவானது.
மயக்கமடையச் செய்வதற்காக Bupivacaine என்ற மயக்க மருந்தினை பயன்படுத்திய பின்னர் அவர்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக பின்னர் தெரியவந்தது.
மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் 109 ஆவது பிரிவினை பயன்படுத்தி, பதிவு செய்யாமலேயே குறித்த மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
109 ஆவது பிரிவிற்கு அமைய, உயிரைப் பாதுகாப்பதற்கு அல்லது தொற்றுநோயை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விசேட நிலைமைகளின் போது தேசிய அவசர நிலைமையினை கருத்திற்கொண்டு, தேசிய பாதுகாப்பிற்காக ஒரு தொகை மருந்தினை இறக்குமதி செய்வதற்கு மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சட்டத்திற்கமைய, அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கை அல்லது சிபாரிசு அவசியமானதாக அமைந்துள்ளது.
சர்ச்சைக்குரிய Bupivacaine Hydrochloride in dextrose என்ற மயக்கமருந்து இந்திய நிறுவனம் ஒன்றில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தது.