எக்காரியமும் பிள்ளையாரை வணங்கி விட்டு தொடங்கும் வழக்கம் வந்த புராணக் கதை

#spiritual #Lanka4 #ஆன்மீகம் #விநாயகர் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
எக்காரியமும் பிள்ளையாரை வணங்கி விட்டு தொடங்கும் வழக்கம் வந்த புராணக் கதை

விநாயகப் பெருமாளை முழு முதற் கடவுள் என்றும், ஆதி முதலானவன் என்றும் பல பெயர்களால் அழைக்கிறோம். 

எந்த செயலை துவங்குவது அல்லது செய்வது என்றாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டு தான் செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் கூட முதலில் விநாயகரை வணங்கி வழிபட்ட பிறகு தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற வழக்கத்தை நாம் காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம்.

 விநாயகர் தடைகளை நீக்கி, வெற்றிகளை தரும் தெய்வம் என்பதால் அவரை வணங்கி விட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றிகரமாக நிறைவடையும் என்பது நம்பிக்கை.

 ஆனால் விநாயகரை வணங்கிய பிறகு தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என்ற முறையை யார் ஆரம்பித்து வைத்தது? இந்த வழக்கம் எப்படி வந்தது? என்பதற்கு வராக புராணத்தில் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

 ஒரு சமயம் செளனகாதி முனிவர்கள் ஒன்று கூடி, தாங்கள் செய்யும் அனைத்து செயல்களும் சரியாக நடக்காமலும், நினைத்தபடி பூர்த்தி அடையாளமல் தடைகள் வந்து கொண்டே இருக்கிறதே என வருத்தமடைந்தனர்.

 இது பற்றி உலகை ஆளும் பரமேஸ்வரனிடமே தீர்வு கேட்கலாம் புறப்பட்டு சென்றனர். ஈசனிடம் தங்களின் குறையை சொல்லி முறையிட்டனர். முனிவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கும் இந்த பிரச்சனைகள் உள்ளன.

 இவற்றிற்கு தீர்வு காண வேண்டும் என நினைத்த சிவ பெருமான் தனது மனைவி பார்வதி தேவியை தனது ஞான கண்ணால் உற்று பார்த்தார். அப்போது அனைவரையும் கவரும் வகையிலான அழகுடன் பிள்ளை ஒன்று தோன்றியது.

 தங்கள் பிள்ளையின் மீது பிறகு கண் பட்டு விடுமே என நினைத்த பார்வதி தேவி, உடல் பருத்து, தொந்தியுடன் இருக்கும் தோற்றத்திற்கு தனது மகனின் தோற்றத்தை மாற்றினார். 

அதற்கு பிறகு சிவனுடன் நடந்த போரில், கோபத்தில் பிள்ளையின் தலையை வெட்டிய ஈசன், பிறகு அதற்கு பரிகாரமாக யானை முகத்தை வைத்தார். அதோடு தங்களின் பிள்ளைக்கு விநாயகன் என்று பெயர் சூட்டினார்.

 இவரே அனைத்து கணங்களுக்கும் தலைவன் என்றும் அறிவித்தார் சிவ பெருமான். இனி யார் எந்த காரியத்தை துவங்கினாலும், அந்த காரியத்தை துவக்குவதற்கு முன் விநாயகரை வணங்கி, வழிபட்ட பிறகே துவங்கப்பட வேண்டும்.

 விநாயகரை வணங்கி விட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் எந்த தடையும் இன்றி வெற்றிகரமாக முடியும். விநாயகரை ஒதுக்கிவிட்டு செய்யும் எந்த செயலுக்கும் தடை ஏற்படும் என தெரிவித்தார்.

 அன்று முதல் இன்று வரை விநாயகரை வணங்கிய பிறகே எந்த ஒரு காரியத்தையும் செய்யும் வழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.