இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் குறித்து ஆராய சுகாதார அமைச்சு தீர்மானம்
அண்மையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வகை மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனகசிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் - அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்கிய கடன் உதவியை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வகை மருந்துகள் நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்டு இந்த மருந்துகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நோயாளர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய சுகாதாரஅமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் இக்குழுவுக்கு தலைமை தாங்குவார். மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நஷ்டஈட்டினைப் பெறுவது குறித்து குறிப்பிட்ட குழுவினர் ஆராய்வார்கள். அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனகசிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இந்த மருந்தினை கொடுத்ததைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். குடலிறக்க சத்திரசிகி ச்சைக்காக மயக்கமருந்தினை கொடுத்தவேளை அவர் உயிரிழந்துள்ளார்.