நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதிவரைபு அடுத்த மாதம் சமர்ப்பிப்பு: விஜேதாச ராஜபக்ச
இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களுடன் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேற்படி ஆணைக்குழுவின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு - பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வரைபு அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு முன்னர் இறுதி வரைபு தொடர்பான விடயங்கள் இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையின் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.