ரஷ்ய துருப்புகள் திரும்ப பெற்ற பின்னரே அமைதி பேச்சுவார்த்தை சாத்தியம்! உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன்- பதில்தாக்குதல் நடத்தி ரஷ்யா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆபிரிக்க தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்.
முதற்கட்டமாக அவர்கள் நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. ஆபிரிக்க தலைவர்கள் இன்று ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது - ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் திரும்ப பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடினைஆபிரிக்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர். இது அவர்களின் முடிவு. இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும். உண்மையிலேயே இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷ்யாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமம். இது வலி மற்றும் துன்பம்.
எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும். இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்ய துருப்புகள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் வரை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.