அரசாங்கத்திற்கு மக்கள் மீது எந்த உணர்வும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் சாதாரண மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்கு சரியான உதாரணம் மின்கட்டண உயர்வு என அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து, நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு வந்த தரப்பை பாதுகாத்து வருவது தற்போதைய ஜனாதிபதியே என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இத்தகைய மோசமான அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எந்தவகையிலும் கைகோர்க்காது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஜனாதிபதியும் ஒன்றிணைவதாக அரசாங்கத்திற்கு சார்பான சில ஊடகங்கள் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பதவிகள் மற்றும் சலுகைகளுக்காக இந்நாட்டு மக்களை ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்தடையச் செய்ததாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வழியில் அவ்வாறே அதை சரியாக அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை செயற்பாட்டாளர்களுடன் நேற்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியை நியமித்த மொட்டுத் தரப்பினர் அமைச்சுப் பதவிகளைக் கோருவதாகவும், தற்போது அது சூதாட்டமாக மாறியுள்ளதாகவும், இந்நாடகத்திற்கு இன்னும் ஒன்றரை வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.