சந்தேக நபரை கண்மூடித்தனமாக சுட்ட பொலிசார்! விமர்சிக்கும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்களின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வலஹந்துவவிலிருந்து நுகதுவ நோக்கிச் செல்லும் வீதியின் குறுக்கு வீதியொன்றில் கடந்த 10 ஆம்திகதி மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவர் சந்தேகத்திற்கிடமாக செயற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது குறித்த இருவரையும் பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மற்றைய நபர், பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை வீச முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 21 வயதான சந்தேகநபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 18 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து T56 ரக 105 ரவைகள் அடங்கிய பொதி மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞனுக்கு முகத்தில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் குறித்த இளைஞனை நோக்கி இரண்டு இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் அதில் ஒன்று அவரது காதை துளைத்தது , இரண்டாவது அவரது முகத்தில் துளைத்துள்ளது.
குறித்த சம்பவமானது மனிதவுரிமை மீறல் செயல் என மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் சந்தேக நபரை முழங்காலுக்கு மேல் சுட பொலிஸாருக்கு உரிமை இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
