வவுனியாவில் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக 5 பேர் கைது!
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5,000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25,000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பல விமர்சனங்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கடந்த (30.05.2023) இரவு தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்றோர் என 10 நபர்களை கைது செய்திருந்தனர்.
எனினும் குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மேலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிஸார் நேற்றைய தினம் தேடுதல் வேடடையினை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.